இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையிலான மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையரான சுஜித் யட்டவர பண்டாரவின் உடல் நேற்று முன்தினம் காலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சடலம் இஸ்ரேலிலிருந்து டுபாய்க்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து நேற்று முன்தினம் காலை 8.37 மணியளவில் Fly Dubai Airlines F.Z.-579 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
சுஜித் யட்டவர பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, அவரது 13 வயது மகள் மற்றும் 9 வயது மகன், இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி மற்றும் பலர் சடலத்தை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
சுஜித் யட்டவர பண்டாரவின் இறுதிக்கிரியையானது வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் இன்று (11) நடைபெறவுள்ளதாக, மனைவி ஜயனி மதுவந்தி தெரிவித்தார்.