மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச மட்ட கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி என். பிருந்தன் ஆகியோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஆர்.எம். றுசைத் தெரிவித்தார்.
அதற்கேற்ப பிரதேச மட்ட சிறுவர் கழக தொண்டர்களினால் அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலை இடைவிலகலை தடுப்பதற்கான இல்லத் தரிசிப்பு மேற்கொள்ளப்பட்டு மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.
இதன்போது இடை விலகிய மாணவர்கள் கற்றலில் எதிர்நோக்குகின்ற இடர்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன.
பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் பிள்ளைகளே இவ்வாறு அதிகளவில் பாடசாலை இடைவிலகல்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் தேவைகளுக்கேற்ப அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன்போது மாணவர்களை மீள பாடசாலைகளில் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதனை தொடர்ச்சியாக கண்காணித்து அவர்களின் தொடர் கற்றல் செயற்பாட்டுக்கு உதவும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவ்வேலைத்திட்டம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எல்லா கிராம சேவகர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஆர்.எம். றுசைத் தெரிவித்தார்.
(ஏறாவூர் சுழற்சி நிருபர்)