மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதுளை பயிர்ச் செய்கையையிட்டு மாதுளை பதப்படுத்தும் நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாட்டி வைக்கப்பட்டது. அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிக்குடியில் மாதுளை செய்கை மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கான பதப்படுத்தும் நிலையம் சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதியை அண்டி நிர்மாணிக்கப்படவுள்ளது.
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 150 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு மாதுளை செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
களுவாஞ்சிக்குடி அக்றி விலேஜ் அமைப்பின் தலைவர் சீ.மதிசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் இ.ஞானசெல்வம், மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைச் செயலாளர் ச.அறிவழகன், விவசாய விஞ்ஞானி அருள்நந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பெரிய போரதீவு தினகரன் நிருபர்