அரச சேவையில் பயிற்சி பெற்றுள்ள 2118 தாதியருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாக, அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகமுமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் கடந்த 2018 ஆம் ஆண்டு தாதி பயிற்சிக்காக 2,518 தாதி மாணவர்கள் இணைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. எனினும், நாட்டில் நிலவிய நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்திற்கொண்டு அவர்களில் 1,000 பேருக்கு மட்டுமே நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
தாதி மாணவர்களின் பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் இந்த விடயத்தில் தலையிட்டது. நிதியமைச்சு, ஐனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருடனும் இது தொடர்பில் சங்கம் கலந்துரையாடியது. இதையடுத்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளை, நாடளாவிய ரீதியில் ஆஸ்பத்திரிகளில் தாதியர்களுக்கான பெருமளவு வெற்றிடங்கள் நிலவுகின்றன. தாதியர்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதால் புதிதாக 1,500 வெற்றிடங்கள் உருவாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)