வெறுப்பூட்டும் Facebook பதிவிற்கு வெறுப்பூட்டும் பின்னூட்டம் வழங்கியதாக CID யினால் கைது

- ஓகஸ்ட் 08 வரை விளக்கமறியல்

Facebook சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட பதிவொன்றுக்கு வெறுப்புணர்வூட்டும் பின்னூட்டம் வழங்கிய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (23) குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், Facebook சமூக வலைத்தளத்தில் இடப்பட்டிருந்த பதிவொன்றுறுக்கு பொதுமக்களிடையே அமைதியை சீர்குலைக்கும் வகையில், பொதுமக்கள் பாதுகாப்பிற்கு இடையூறை ஏற்படுத்தும் நோக்கில் பின்னூட்டங்களை (Comment) வழங்கிய நபர் ஒருவர் தொடர்பில், தென் மாகாண கணனி குற்றப் புலனாய்வு உப பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (24) காலி கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக் வலைத்தளத்தில் சிங்களத்தில் இடப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த பதிவு (சிங்கள பதவின் தமிழ் மொழிபெயர்ப்பு)

"அடுத்த 09ஆம் திகதி நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்துவேன். பொலிஸ், ஆமியை குடும்பத்துடன் ஆங்காங்கே வீதிகளில் நாய்கள் போல் முடித்து விடுவோம். யாழ்ப்பாணத்தில் உள்ள எனக்குத் தெரிந்த தமிழர்களுடன் டோக்கை (பேசி) போட்டு இரண்டு ரயில்கள் நிரம்ப மக்களை கொண்டு வந்தேன். தனி ஒரு ஆளான என்னால் இதனை செய்ய முடியும் என்றால் நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்தால் என்ன செய்ய முடியாது."

மற்றும்

"காக்கி நாய்கள் கெமா பிம்பியோக்கள் ரணிலோடு சொல்லி வெட்டிக்கொண்டு பயர் ஆகியுள்ளார்கள்"

எனும் பதிவுகளுக்கு துவேசகரமாகவும், வெறுப்பூட்டும் வகையிலும் தனது பேஸ்புக் கணக்கின் ஊடாக குறித்த சந்தேகநபர் பின்னூட்டம் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 18ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட இல 2289/07 இலக்க அவசரகாலச் சட்ட நிலை தொடர்பான அதி விசேட வரத்த்தமானி அறிவிப்பின் 15ஆம் இலக்கத்தின் அடிப்படையிலும், குற்றவியல் சட்ட விதிமுறைகளின் கீழ், கணனி குற்ற விசாரணை பிரிவினால், குறித்த சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 08ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பதிவை முதலில் வெளியிட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட அதற்கு தமது ஆதரவை வெளியிட்ட ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தென் மாகாண கணனி குற்றப் புலனாய்வு உப பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...