- நூற்றுக்கணக்கானோர் காயம்
- 83 நில ரீதியிலான இலக்குகளை அழிப்பு: ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள வான், தரை, கடல் வழி தாக்குதல்களில் இதுவரை படையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட குறைந்தது 137 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல்களில் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் (25) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அறிவிப்பைத் தொடர்ந்து இன்றைய இரண்டாவது நாளாகவும் இப்படையெடுப்பு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், முதல் நாளில் தனது அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டதாகவும், 83 நில ரீதியிலான உக்ரேனிய இலக்குகளை அழித்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு எதிராக நடத்தும் மிகப்பெரிய தாக்குதலாக இது மாறியுள்ளது.
இத்தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மக்கள் அதன் நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையங்களிலும், பாதாளத் தளங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
உக்ரைனின் கார்கிவ் (Kharkiv) அருகே உள்ள Chuguyeg விமானப்படை தளத்தின் மீது ரஷ்யப்படை தாக்குதல் மேற்கொண்டு அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் கிழக்கில் உள்ள இந்த விமான தளத்தில் இருந்து புகை மேலெழும்புவதை Planet Labs செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. அத்துடன் இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
உக்ரைனில் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வரும் ரஷ்யாவின் இராணுவ தாக்குதலுக்கு அமைய, அணு விபத்து ஏற்பட்ட தளமான Chernobyl தளத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக, உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைவிடப்பட்ட Pripyat நகரம்
இந்த அணு உலையில் 1986ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்து, மனித வரலாற்றில் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோசமான அணு விபத்தாகும். இப்பேரழிவு இடம்பெற்று 35 வருடங்களுக்கும் மேலாகிறது.
கைவிடப்பட்ட அணு உலை
உக்ரைனிலுள்ள விமானப்படைத் தளங்கள் மற்றும் அதன் முக்கிய இராணுவ இலக்குகள் மீது ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு முன்னேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment