GI குழாய் நிதி மோசடி வழக்கிலிருந்து பசில் ராஜபக்‌ஷ, கித்சிறி ரணவக விடுதலை

GI குழாய் நிதி மோசடி வழக்கிலிருந்து பசில் ராஜபக்‌ஷ, கித்சிறி ரணவக விடுதலை-Basil Rajapaksa & Kithsiri Ranawaka Released from the Divineguma GI Pipe Case

திவிநெகும GI குழாய் நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக ஆகியோரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதிகளான குறித்த இருவர் மீதும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரங்களை சட்ட மாஅதிபர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து இவ்வுத்தரவை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக ஆகியோருக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் நடவடிக்கைக்காக GI குழாய்களை கொள்வனவு செய்து விநியோகிப்பதற்காக திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான ரூ. 36.5 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது, ​​திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான ரூ. 2,292 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த வருடம் நவம்பரில் இத்தீர்ப்பு வழங்க்ப்பட்டதோடு, ரூபா 36.5 மில்லியன் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, பஞ்சாங்கம் மற்றும் GI குழாய் விநியோகித்த வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டபோது, விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியிருந்தது.

தற்போது குறித்த வழக்குகளிலிருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.