சொத்து மதிப்பீட்டு வரி உள்ளிட்ட கொழும்பு மாநகர சபையில் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை ஒன்லைனில் செலுத்தும் போது அறவிடப்பட்ட சேவைக்கான வசதிக் கட்டணம் (Convenience Fees) நீக்கப்பட்டுள்ளது.
2021 செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நடைமுறை அமுலுக்கு வருவதாக, மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷணி திஸாநாயக்க விடுத்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வரவு மற்றும் கடன் அட்டைகள் மூலம் கட்டணங்களை செலுத்தும்போது வங்கிகளினால் அறவிடப்படும் (3.5%) குறித்த கட்டணமானது, இதுவரை உரிய கட்டணத்திற்கு மேலதிகமாக கட்டணத்தை செலுத்துபவரிடமிருந்து அறவிடப்பட்டு வந்த நிலையில், குறித்த சேவைக் கட்டணத்தை கொழும்பு மாநகர சபை அதனை நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் உரிய வரியை அல்லது கட்டணத்தை மாத்திரம் செலுத்தினால் போதுமென அறிவித்துள்ள மாநகர ஆணையாளர், குறித்த சேவை கட்டணத்தை மாநகர சபை செலுத்துமென சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் இணையத்தளமான www.colombo.mc.gov.lk இற்கு சென்று (eservice.colombo.mc.gov.lk/cmc-citizen-web/Payments/OnlinePayments) மேலதிக கட்டணங்களின்றி உரிய வரி மற்றும் கட்டணங்களை ஒன்லைன் மூலம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.