பொலிஸார் மீது டிப்பர் வாகனத்தினால் வேண்டுமென்று மோதி விட்டு தப்பிச் சென்ற நபருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (13) இரவு ஹக்மன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொங்கல வீதிச் சோதனைச்சாவடி கடமையில் ஈடுபட்ட பொலிஸார் மீது டிப்பர் வாகனமொன்று வேண்டுமென்று மோதிச் சென்றதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்திருந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்தனர்.
குறித்த நபர், நேற்று (14) பிற்பகல் 2.30 மணியளவில் ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ரனால பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபரை, இன்று (15) மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவரை எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கடமையிலுள்ள அதிகாரிகள் மீது சிறிய மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், வாகனத்தை அபாயகரமாக செலுத்தியமை, வலது புறமாக வாகனத்தை செலுத்தியமை உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Add new comment