வட மாகாணத்துக்கான விஜயமொன்றை விரைவில் மேற்கொள்ளப் போவதாகவும் அதன் போது நெடுந்தீவு மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் படகு சேவையில் நிலவும் சிக்கல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில்
தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி ஸ்ரீதரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீதரன் எம்.பி தமது கேள்வியின் போது:
போக்குவரத்து அமைச்சர் வடக்கில் நெடுந்தீவுக்கு வருகை தருவதாக சபையில் தெரிவிப்பது முக்கியமானது. அவ்வாறு அவர் நெடுந்தீவுக்கு வருகை தரும் போது அவர் கடற்படையின் படகை பயன்படுத்தாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் படகை பயன்படுத்த வேண்டும். அதே போன்று நெடுந்தீவுக்கு சென்றதன் பின்னர் அங்கு முச்சக்கர வண்டியைப் பயன்படுத்தாமல் இ.போ.ச பஸ் வண்டியை உபயோகப்படுத்த வேண்டும். அப்போது தான் அங்குள்ள மக்களின் உண்மையான பிரச்சினை அமைச்சருக்கு தெரியவரும் என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், யாழ். நெடுந்தீவு வீதிகளின் மொத்த நீளம் 14 கிலோமீற்றராக காணப்படுகிறது. காலை, மாலை என்ற அடிப்படையில் இந்த இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. எனினும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் எதிர்நோக்கியுள்ள போக்குவரத்து பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்தில் தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்