அமானா வங்கியின் எதிர்வரும் உரிமைப் பங்கு வழங்கல் செயற்பாட்டுக்கு, வங்கியின் பங்குதாரர்கள் தமது அனுமதியை வழங்கியுள்ளனர். அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பொது ஒன்றுகூடலின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் 2,902,267,365 சாதாரண வாக்குரிமை பங்குகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் 1 புதிய பங்கு வீதம், பங்கொன்றுக்கு ரூ. 2.30 எனும் அடிப்படையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த மூலதன தேவைப்பாடான ரூ. 20 பில்லியன் இருப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த உரிமைப் பங்கு வழங்கலினூடாக ரூ. 6.7 பில்லியனை திரட்டுவதற்கு அமானா வங்கி எதிர்பார்த்துள்ளது. பங்குதாரர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஏதேனும் பங்குகளை, சகல மேலதிக உரிமை பங்கு வழங்கல் விண்ணப்பதாரிகளுக்கும் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர், கோரப்படாத உரிமைப் பங்குகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் சட்ட அமைப்புகள் அடங்கலாக இதர நபருக்கு(களுக்கு) ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
உரிமைப் பங்கு வழங்கல் கால எல்லைகளின் அடிப்படையில், XR திகதி செப்டெம்பர் 22ஆக நிர்ணயிக்கப்பட்டதுடன், பதிவு திகதி மற்றும் ஒதுக்கீட்டு திகதி செப்டெம்பர் 26 ஆக தீர்மானிக்கப்பட்டது. ஒதுக்கீடு தொடர்பான கடிதங்களை ஒக்டோபர் 5ஆம் திகதி வெளியிடுவதற்கு வங்கி எதிர்பார்க்கின்றது. உரிமைப்பங்கு வழங்கல் வியாபாரம் ஒக்டோபர் 11ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதுடன், CDS இல் தன்னலமறுப்புக்கான இறுதி திகதி ஒக்டோபர் 18 ஆகும். உரிமை வழங்கலுக்கான கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்வதை ஒக்டோபர் 24ஆம் திகதி வரை வங்கி முன்னெடுக்கும்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.