அவுஸ்திரேலியாவில் பாலியல் தாக்குதல் வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது வழக்கு தொடர்பில் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கு ஒன்றை தொடரவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் கடந்த 11 மாதங்களாக வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்த குணதிலக்க கடந்த செவ்வாய்க்கிழமை (3) இரவு இலங்கை திரும்பினார். அவுஸ்திரேலிய சட்டத்தின்படி தன் மீது குற்றம் சுமத்திய பெண்ணிடம் இழப்பீடு கோரி வழக்குத் தொடுக்க முடியாது என்று குணதிலக்க சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் வழக்கு விசாரணைக்கான செலவுகளுக்காக இழப்பீடு கேட்டு அவுஸ்திரேலிய அரசுக்கு எதிரான சிவில் வழக்கு ஒன்றை தொடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். மிக விரைவில் அந்த வழக்கை தொடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிய கிண்ணம் மற்றும் உலகக் கிண்ணத்தில் ஆட முடியாமல் போனது பற்றி இலங்கை திரும்பிய குணதிலக்க ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். கூடிய விரைவில் பயிற்சிகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.