இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் மெண்டிஸின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை ஹைதராபத்தில் நடைபெற்ற போட்டியில் அதிரடி சதம் பெற்ற குசல் மெண்டிஸ் துடுப்பெடுத்தாடிவிட்டு அரங்கு திரும்பும்போது தசைப்பிடிப்பு உபாதைக்கு முகம்கொடுத்ததோடு மூச்சு விடுவதற்கும் சிரமத்தை சந்தித்துள்ளார். இதனை அடுத்து அவர் உடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் இலங்கை உப தலைவரான குசல் மெண்டிஸ் உபாதையில் இருந்து மீண்டிருப்பதாகவும் அடுத்த போட்டிக்கு முழு உடல் தகுதி பெற்றிருப்பதாகவும் இலங்கை அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இம்முறை உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டத்தில் சோபித்து வரும் குசல் மெண்டிஸ் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளில் 76 ஓட்டங்களை விளாசியதோடு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 77 பந்துகளில் 122 ஓட்டங்களை பெற்றார். இதன்போது அவர் உலகக் கிண்ணத்தில் இலங்கை சார்பில் அதிவேக சதம் பெற்றவராக குமார் சங்கக்காரவின் சாதனையையும் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை அணி லக்னோவை சென்றடைந்துள்ளது. அடுத்த போட்டிக்கு இடையே இலங்கை அணிக்கு ஐந்து நாள் இடைவெளி உள்ளது.
இலங்கை அணி அடுத்து வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு தொடர்ந்து ஒக்டோபர் 21ஆம் திகதி நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் போட்டிகளுக்காக இலங்கை அணி நாளை (14) தனது பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது.
உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இலங்கை அணி உலகக் கிண்ண புள்ளிப் பட்டியலில் எந்தப் புள்ளிகளும் இன்றி எட்டாவது இடத்தில் உள்ளது.