நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பரந்த வயல்வெளிகளில் அதிகநேரம் நின்று வேலைசெய்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டுமென கமலநல அமைப்புக்கள் அறிவுறுத்தியுள்ளன.
தற்போது அதிக வெப்பம் காரணமாக சிறுவர்கள், முதியோர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட உடலை வருத்தி அன்றாட தொழிலில் ஈடுபடும் பலர் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். இதனால் சருமநோய், வயிற்றோட்டம், தலையிடி, தலைசுற்றல், மயக்கம் போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட்டு பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் அக்கினி வெயில் ஆரம்பமாகவுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிழக்கில் சிறுபோகத்துக்கான வயல் வேலைகள் நடைபெற்றுவருவதால் விவசாயிகள் நீண்டநேரம் பரந்த வயல்வெளிகளில் நின்று வேலைகளில் ஈடுபடுவதால் சில உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஆகையால் விவசாயிகள் அதிக வெப்பம் நிலவும் காலப்பகுதியில வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் தங்களது பணிகளை அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
பாண்டிருப்பு தினகரன் நிருபர்