கிழக்கில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக நீர்நிலைகளில் நீர் வற்றியுள்ளது. அதிலும் காடுகளை அண்டிய பிரதேசங்களிலுள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இதன்காரணமாக காட்டு விலங்குகள் மக்கள் வசிக்கும் எல்லைப்புற கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன.
இவ்வாறு கிராமப்புறங்களுக்குள் நுழையும் மான், மரை, பன்றி, முயல், உடும்பு உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றை இலக்கு வைத்து சிலர் வேட்டையாடி வருகின்றனர். இதனால் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் இனவிருத்தியும் குறைவடைந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சட்டவிரோதமான முறையில் விலங்குகள், பறவைகளை வேட்டையாடுபவர்களுக்கு எதிராக வனவிலங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதோடு பொதுமக்கள் காட்டு விலங்குகள் பறவைகளை வேட்டையாடும் நபர்கள் தொடர்பில் இரகசிய தகவல்களை வழங்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாண்டிருப்பு தினகரன் நிருபர்