மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமுலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமுலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது.
அதேபோல கடந்த 21 ஆம் திகதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவாலின் கைது, ஆம் ஆத்மி மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மாவின் ஒருநபர் அமர்வுக்கு முன்னர் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி கூறியிருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில், “கெஜ்ரிவாலின் கைதுக்கான வலுவான ஆதாரங்களை அமுலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது. கைது நடவடிக்கையில் எந்த சட்டவிதிகளையும் அது மீறவில்லை. அதேபோல, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கைது செய்தது சரிதான். மதுபான கொள்கையை உருவாக்கியதில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த வழக்கு பிணை பற்றியதல்ல, இது ஒட்டுமொத்த கைது நடவடிக்கையையே செல்லாது என்று அறிவிக்க கோரும் வழக்கு. முதல்வராக இருப்பதால் எந்த சலுகையும் வழங்கப்படாது” என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிபதி கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தார். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கெஜ்ரிவால் தரப்பினர் மேன்முறையீடு செய்யவுள்ளனர்.