தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் உள்நாட்டு உற்பத்திகளான அரிசி, மரக்கறிகள், முட்டை, கோழி இறைச்சி, பழங்கள் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்குமென, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்நிலையில் எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் முட்டையொன்றின் விலை 30 ரூபாவாக குறைக்கப்படுமெனவும், அவர் கூறினார். கடந்த மாதங்களில் வேகமாக அதிகரித்த மரக்கறி விலை மற்றும் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு தற்போது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் உற்பத்திகளை அதிகரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் தேவைக்கு அதிகமாக அத்தியாவசியப் பொருட்களை சந்தையில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமெனவும், அவர் குறிப்பிட்டார்.
புத்தாண்டுக்கு முன்னர் ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 5,000 ரூபாவாக அதிகரிக்குமென்று பலர் கூறிய போதிலும், தற்போது கரட் மட்டுமன்றி அனைத்துப் பொருட்களினதும் விலை குறைவடைந்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.