Monday, April 29, 2024
Home » தேர்தலுக்கான கட்டுப்பண தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

தேர்தலுக்கான கட்டுப்பண தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

ஜனாதிபதி, நீதி அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

by mahesh
April 10, 2024 7:30 am 0 comment

தேர்தல்களின் போது வேட்பாளர்களினால் செலுத்தப்படும் கட்டுப்பணத்துக்கான தொகையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அமைச்சரவை இதற்கான அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார பின்னடைவுக்கு பொருத்தமான வகையில் கட்டுப்பணத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. மேற்படி சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டம் மூலம் தயாரிப்பு குழுவுக்கு வழிகாட்டல்களை வழங்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச ஆகியோர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கிணங்க 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினுடைய வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணம் ரூபா 2.6 மில்லியன்வரை அதிகரிக்கப்படுவதுடன், சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணத் தொகை 3.1 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. பாராளுமன்ற தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணத் தொகை 11,000 ரூபாவாகவும் சுயேட்சை குழு வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணம் 16,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணம் 6,000 ரூபாவாகவும் சுயேட்சை குழு வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணத் தொகை 11,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த திருத்தங்களுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT