நாட்டில் நிலவும் அமைதியான சூழல் சுற்றுலாத்துறை முன்னேற்றத்துக்கு நேரடியான தாக்கத்தை செலுத்துமெனவும் அமைதி சூழலை தக்க வைப்பது முக்கியமென்றும் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எனினும், தென் மாகாணத்தில் இடம்பெற்று வரும் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக சுற்றுலாப் பயணிகள் கவலையடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் ஏனைய வன்முறைகள் காரணமாக சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் காணப்படுவதாகவும் குறிப்பாக தென் மாகாணத்தில் பெந்தர, கொஸ்கொட, ஹிக்கடுவ போன்ற பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் சுற்றுலாப் பயணிகளை அச்சமடையச் செய்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அமைதியான சூழலில் வாழ்ந்த மேற்படி சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டுக்கு வருகை தந்து இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது பெரும் கவலையடைந்துள்ளனர்.
அதனால் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி உல்லாசப் பிரயாணிகள் தாம் விரும்பும் அமைதி சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப்பாகுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)