டிக்டொக் சமூக ஊடகச் செயலி தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று தாய்வான் அறிவித்துள்ளது. தாய்வானின் டிஜிட்டல் விவகார அமைச்சர் ஒட்ரி டாங் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அரச பிரதிநிதிகள் சபை விசாரணைகளின் அடிப்படையில் டிக்டொக்கை ஆபத்தான தயாரிப்பு என்று தாய்வான் வகைப்படுத்தியுள்ளது. தாய்வானின் தர நிலைகளின் படி, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிநாட்டு சக்திகளால் கட்டுப்படுத்தக்கூடிய எந்தவொரு தயாரிப்பும் தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றுள்ளார்.
டிக்டொக் செயலி தொடர்பில் அமெரிக்காவைப் போன்ற நிலைப்பாட்டை எடுப்பது தொடர்பில் தாய்வான் கவனம் செலுத்தியுள்ளது.
தாய்வானின் அரச நிறுவனங்களிலும் அவற்றின் வளாகங்களிலும் டிக்டொக் பயன்பாட்டுக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.