அல்லாஹுத்தஆலா மிகவும் இரக்கமுள்ளவன். தனக்கு அருளாளன், மன்னிப்பாளன், தௌபாக்களை ஏற்பவன் என்ற நாமங்களை சூட்டிக்கொண்டவன். எனவே அவனிடத்தில் மிகவும் தூய்மையான உள்ளத்துடன் செய்த பாவங்களை நினைத்து வருந்தி பச்சதாபப்பட்டு இதன் பிறகும் அத்தகைய பாவங்களை நோக்கி மீளமாட்டேன் என்ற உறுதியுடன் மிகவும் தாழ்மையோடு மன்னிப்புக் கேட்கும்போது எமது பாவங்களை அவன் மன்னிக்கத் தயாராக இருக்கிறான்.
‘(நபியே) நீர் கூறுவீராக..! தங்கள் ஆத்மாக்களுக்கு அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே..! அல்லாஹ்வின் கருணையைப் பற்றி நம்பிக்கை இழந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகிறான். அவன் பெரிதும் மன்னிப்போனும் கருணையானவனாக இருக்கிறான்’ (சூரா- அஸ்ஸுமர்: 56)
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள். அவர்களில் மிகச் சிறந்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பவர்கள்’ என்று கூறியுள்ளார்கள்.
அதேநேரம், ‘ஒரு முஸ்லிம் காலையில் செய்யும் பாவங்களை மன்னிக்க மாலையிலும் மாலையில் செய்கின்ற பாவங்களை மன்னிக்க காலையிலும் தௌபாவுடைய வாசல்களை இறைவன் திறந்து வைத்துள்ளான்.’ என்றும், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, இரவு வணக்கங்களில் ஈடுபடுவதன் மூலம் அல்லாஹுத்தஆலா முன்பாவங்களை மன்னிக்கிறான் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்- ஸஹீஹுல் புஹாரி) எனவே நோன்பு நோற்று இறைவணக்கங்களில் ஈடுபட்டு அதிகமதிகம் பாவமன்னிப்பு கோருவோம். அதன் ஊடாக அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறுவோம்.
முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ் (காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்