சுப்பையா ஆனந்தகுமார் பிறந்த தின வாழ்த்து
அதலபாதாளத்தில் இருந்த நாட்டை மீட்டெடுத்த பெரும் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இன்னும் இரண்டு தவணைகள் அவருக்கு நாட்டை கையளித்தால் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை வந்துவிடும் என ஜனாதிபதியின் 75 ஆவது பிறந்த தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினரும் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு நாடு சுதந்திரத்துக்குப்பின் நாம் என்றும் எதிர்கொண்டிராத பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டோம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி தலைவர் உட்பட பலரிடம் கூறிய போதும் ஒவ்வொரு காரணம் கூறி பின்வாங்கியவர்கள் மத்தியில் ஒற்றை நபராக சவாலை ஏற்று சரித்திரம் படைத்த அரசியல் தலைவராக ஜனாதிபதி இருக்கிறார்.
2022 மார்ச் அன்று நாடும் நாமும் இருந்த நிலையும் 2024 மார்ச் இன்று நாடும் நாமும் உள்ள நிலையும் அனைவருக்கும் தெரியும். வாழ வழியின்றி எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்தோம். எங்கு பார்த்தாலும் வரிசைகள் காணப்பட்டன. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. மறுபுறம் கடன் நெருக்கடியிலும் நாடு மூழ்கியது. சர்வதேச நாணய நிதியதுடன் பேச்சுக்கள் நடத்தி கடன் நெருக்கடிக்கும் தீர்வுகண்டார்.
ஆனால், இன்று நாம் மீண்டெழுந்துள்ளோம். சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. டொலரின் பெறுமதி குறைந்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்தில் தற்போதைய நிலையையும் விட பொருளாதாரம் ஸ்திரமடையும். ஆகவே, எமது நாடு முன்னேற ஒரே வழி அடுத்த இரண்டு தவணைகளுக்கு ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பது. மக்கள் அந்த வாய்ப்பை வழங்குவார்களென நம்புகிறேன் எனவும் அவர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.