உலகின் மிகப்பெரிய டி20 லீக் கிரிக்கெட் தொடரான 17 ஆவது இந்திய பிரீமியர் லீக் தொடர் இன்று (22) ஆரம்பமாகிறது.
நடப்புச் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே சென்னையில் இரவு 8.00 மணிக்கு நடைபெறும் போட்டியுடனேயே இந்த ஐ.பி.எல். தொடர் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 19 மற்றும் ஜூன் முதலாம் திகதிக்கு இடையே இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால் தொடரின் முழு போட்டி அட்டவணையும் இன்னும் வெளியிடப்படவில்லை.
முதல் இரு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, எதிர்காலத்தில் எஞ்சிய அட்டவணையை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளது.
இதில் ஆடும் பத்து அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் 14 குழுநிலை போட்டிகளில் ஆடும். இதன்போது ஓர் அணி தனது குழுவில் உள்ள அணியுடன் ஒரு முறையும் மற்றக் குழுவுடன் இரண்டு முறையும் மோதும். ஒற்றை புள்ளிப்பட்டியல் அடிப்படையிலேயே முடிவுகள் சேர்க்கப்படும்.
தொடர்ந்து குழுநிலையில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்காக மோதும் ஆட்டத்துடன் பிளேஓப் போட்டிகள் ஆரம்பிக்கும். பின்னர் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் அதில் தோல்வியுறும் அணி வெளியேறுவதோடு வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முதல் பிளேஓபில் தோற்ற அணியை எதிர்கொள்ளும்.