பா.ஜ.கவின் செல்வாக்கு தமிழகத்தில் படிப்படியாக அதிகரிப்பு
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகி ஜுன் 1 ஆம் திகதி முடிவடைகின்றது.
தமிழகத்தில் எப்படியாவது 10 ஆசனங்களையாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது.. இதுகுறித்த முக்கிய வியூகம் ஒன்றையும் அக்கட்சி வகுத்துள்ளது.
இந்த முறை அ.தி.மு.கவுடனான கூட்டணிக்கு பா.ஜ.க கடுமையாக முயற்சித்தது. பல மாத காலம் காத்திருந்தது. டெல்லியிலிருந்து சில சிரேஷ்ட தலைவர்களே வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போதாக்குறைக்கு ஜி.கே. வாசன் போன்ற தோழமைக் கட்சித் தலைவர்களும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இறுதிவரை, பா.ஜ.கவுடனான கூட்டணி கிடையாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து விட்டார்.
எனவே, பாஜக துணிச்சலாகப் போட்டியிடத் தயாராகி வருகிறது. இதற்காகவே, பிரதமர் மோடி, அடிக்கடி தமிழகம் வந்து கொண்டிருக்கிறார். எனினும், தமிழகத்தில் காலூன்ற அ.தி.மு.கவின் தயவும் பா.ஜ.கவுக்கு தேவையாக இருப்பதாகவே தெரிகிறது.
பா.ஜ.கவை பொறுத்தவரை தமிழகத்தில் கோவை, தென்சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி உட்பட 6 தொகுதிகளில் பலமாக உள்ளது.
இந்த 6 தொகுதிகளிலுமே அ.தி.மு.கவும் பலமாக உள்ளது.
பா.ஜ.க கூட்டணிக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவுகளை திரண்டு தந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், பா.ஜ.கவுக்கு வாக்களிக்க பிராமணர் சங்கம் ஆதரவு தந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில்கொண்டு, நரேந்திர மோடியை 3- ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க செய்யவும், தாமரை சின்னத்தில் வெற்றி பெறச்செய்யவும் இச்சங்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
கொங்குநாடு முன்னேற்ற கழகமும் தன்னுடைய ஆதரவை பா.ஜ.கவுக்கு தெரிவித்துள்ளது. பா.ஜ.கவுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன என்றாலும், அ.தி.மு.கவின் உதவியையும் மறைமுகமாக வேண்டுவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.