பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் பொத்துஹெரயிலிருந்து ரம்புக்கன வரையான பகுதிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். பொதுஹெர லிஹினிகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள இத்திட்டத்தின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், தற்போதைய வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக, அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
பின்னர், தற்போது நிர்மாணப்பணிகள் நடைபெற்று வரும் பொத்துஹெர இடை பரிமாற்ற நிலையம், வதகட, துருவியன- பூல்கொல்ல, தொம்பேமட போன்ற பல இடங்களையும் அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர். மொத்தம் 32.45 கி.மீ தூரம் கொண்ட இந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டம் நான்கு மாற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் 29 பில்லியன் ரூபா செலவில் இந்தப் பகுதியை நிர்மாணித்து முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்ததால், டொலரின் பெறுமதி உயர்ந்து, தற்போது 52 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிட வேண்டி உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.