ஐரோப்பிய பாதுகாப்பு முகவர் அமைப்பின் EASA எட்டாவது சர்வதேச ஒத்துழைப்பு கூட்டம் (CAASL) இன்று (19) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அனுசரணையுடன் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் ஜரோப்பிய அமைப்பின் ஆசிய பசுபிக் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த உள்ளூர் சிவில் விமான சேவை நிறுவனங்களின் உள்நாட்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சுமார் 100 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார். துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி. எஸ்.ருவான்சந்திர உள்ளிட்ட உயர் அதிகரிகள் பலர் இதில்,கலந்துகொள்ளவுள்ளனர்.
முதலாவது கூட்டம் 2008 இல் நடத்தப்பட்டது. இது விமான அதிகாரிகளுக்கான சர்வதேச தளமாக செயற்பட்டு வருகிறது. பிராந்திய ஒத்துழைப்பில் ஆர்வமுள்ள பிராந்திய நிறுவனங்கள் இந்த இமைப்புடன் இணைந்து செயல்பட்டுவருகின்றன.
அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தர நிலைகளில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றி விவாதிக்கவும், சர்வதேச ரீதியில் பாதுகாப்பான மற்றும் நிலையான விமானப் போக்குவரத்தை மேம்படுத்தவும் வாய்ப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.