புதிதாக ஆரம்பிக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை
கொழும்பை அண்டிய பிரதேசங்களிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் மேல் மாகாண போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபரின் கீழ் ‘City Traffic Police என்ற பெயரில் இயங்கும்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகர் பிரதேசங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் ‘நகர போக்குவரத்து பொலிஸ்’ (City Traffic Police) என்ற பெயரில் புதிதாக பொலிஸ் பிரிவொன்றை உருவாக்குவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பிலிருந்து கடவத்தை, கட்டுநாயக்கா, கடுவெல, மொரட்டுவை, கொட்டாவை, பிலியந்தலை வரை காணப்படும் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கி இப் புதிய பொலிஸ் பிரிவை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய நகர போக்குவரத்து (City Traffic Police) பொலிஸாரின் அதிகார பிரதேசமாக மேற்குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகள் கணிக்கப்படுமென்றும் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பொலிஸ் பிரிவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கொழும்பு நகர போக்குவரத்துப் பொலிஸ், மேல் மாகாண தெற்கு மற்றும் மேல் மாகாண வடக்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளை இல்லாதொழித்து இந்த புதிய செயற்திட்டம் நடைமுறை ப்படுத்தப்படவுள்ளதுடன் அதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய நகர போக்குவரத்து (City Traffic Police) பொலிஸ் நிலையத்தை ஸ்தாபிக்கும் சமகாலத்தில் இந்த போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான நிர்வாக பிரதேசத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலுமுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள், மேல் மாகாண போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படவுள்ளதாகவும் அந்த பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.