2024ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்டளைகள் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பொதுச் சேவை உத்தியோகத்தர்களை புதிய சேவை நிலையத்தில் கடமையைப் பொறுப்பேற்பதற்கு ஏதுவாக விடுவிப்பு செய்யுமாறு கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எம்.எம். நசீர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான சுற்றுநிரூபம் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பொதுச் சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த புதிய இடமாற்றங்கள் அனைத்தும் எதிர்வரும் மார்ச் 01ம் திகதி முதல் அமுல்படுத்தப்படுமென அறிவித்துள்ளார்.
2024ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பொதுச் சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற மேன்முறையீடு தொடர்பாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு இடமாற்ற சபையினால் சிபாரிசு செய்யப்பட்ட இடமாற்றப் பட்டியல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ற வகையில் இடமாற்ற உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி விடுவிப்புச் செய்யப்பட வேண்டுமென கேட்டுள்ளார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிள் ஒரு நிலையத்தில் தொடர்ச்சியாக பல வருடங்களாக சேவையாற்றிவருகின்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், சாரதிகள், அலுவலகப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய உத்தியோகத்தர்களே இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்டளை வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களை விடுவித்து பதிலீட்டு உத்தியோகத்தர்கள் வரும் வரை காத்திராமல் பணியை கையாள்வதற்கான தற்காலிக ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பல காரணங்களைச் சுட்டிக்காட்டி இடமாற்ற விடுப்புக்களை கால தாமதப்படுத்த வேண்டாமெனவும், வருடாந்த இடமாற்றத்தை சிறப்புற மேற்கொள்ள தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுள்ளார்.
ஒலுவில் விசேட நிருபர்