மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள எருவில் கண்ணகி மகாவித்தியாலய அதிபராகக் கடமையாற்றிய சின்னத்தம்பி – சத்தியநாதன் தனது 36 வருட கால அரசபணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு எருவில் கிராமத்தில் 1964.02.10 இல் சின்னத்தம்பி_- வள்ளியம்மை தம்பதியினரின் மகனாகப் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்திலும். உயர்கல்வியை பட்டிருப்பு தேசியப் பாடசாலையிலும் கற்றார்.
பின்னர் 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவனாக இணைந்து கலைமாணி பட்டத்தை பூர்த்தி செய்தார். இவர் இலங்கை ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 1988.08.22 இல் ஆசிரிய நியமனம் பெற்றார்.
தனது சொந்தவூரில் உள்ள கண்ணகி மகாவித்தியாலயத்தில் கல்விப் பணியை ஆரம்பித்த இவர், அங்கு கணித பாட ஆசிரியராகப் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய பயிற்சி கலாசாலைக்குத் தெரிவான இவர் பயிற்றப்பட்ட கணித ஆசிரியரானார்.
மீண்டும் எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்திற்கு கணிதபாட ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
2009ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவான இவர், தேற்றாத்தீவு மகாவித்தியாலயத்தில் இரண்டு வருட காலம் பிரதி அதிபராகப் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து கோவில்போரதீவு விவேகானந்தா வித்தியாலயத்தில் எட்டு வருட காலம் பொறுப்பு அதிபராகவும், பின்னர் எருவில் கண்ணகி மகாவித்தியாலய அதிபராக 2020.01.14 தொடக்கம் 2024.02.09 வரை பணியாற்றி இளைப்பாறினார்.
கல்விப் புலத்தில் ஆசிரியராக, அதிபராக பணியாற்றிய இவரை எருவில் கிராம மக்கள் பெருவிழாவெடுத்து பாராட்டினர். இதேவேளை பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் சேவைநலன் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
செல்லையா- பேரின்பராசா
(துறைநீலாவணை நிருபர்)