நாட்டின் சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் தரமான மாற்றங்களை கொண்டு வர விரைவில், தேசிய திரைப்பட அபிவிருத்தி ஆணைக் குழு நிறுவப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.77 வருடத்தை பூர்த்தி செய்த தேசிய பேசும் சினிமா படம் மற்றும் 52 வருட நிறைவை பூர்த்தி செய்யும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கணி திரையரங்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இங்கு பேசிய அமைச்சர்:
“ஐம்பத்திரண்டு வருட தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன வரலாற்றில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்து நன்றி தெரிவிக்கும் இத்தருணத்தில் பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தை உருவாக்குவதற்கு முன்னோடியாக இருந்தவர் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா. உலகின் முதல் பெண் பிரதமர், தனியார் துறையாக இருந்த திரைத்துறையை, அரச துறைக்கு மாற்றியிருந்தார்.
இந்நிறுவனத்தை தேசிய திரைப்பட அபிவிருத்தி ஆணைக்குழுவாக மாற்றுவதற்கான சட்ட வரைவு , துறைசார் அறிஞர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து தயாரிக்கப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, தேசிய அபிவிருத்தி ஆணைக் குழு திரைத்துறையில் உள்ள அனைத்து படைப்பாளிகளுக்கும் ஆதரவு மற்றும் ஊக்கம் அளிப்பதன் மூலம் திரைப்படத் துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தலாம்.இதற்காக, இதன் கட்டமைப்புக்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபகரான மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பத்து கலைஞர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.இலங்கை சினிமாவின் 77வது ஆண்டு நிறைவை ஒட்டி “சித்ரபட” சிறப்பு இதழும் வெளியிடப்பட்டது.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி தீபால் சந்ரரத்ன, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ரவி பிரசாத் களுபஹன, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள், சிரேஷ்ட நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.