பொதுமக்கள் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு
கோவிற்குடியிருப்புக் கிராமத்தில் 2024ஆம் ஆண்டுக்கான கிராம மட்ட பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்ட முன்மொழிவு நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் நடைபெற்றது.
கோவிற்குடியிருப்புக் கிராமத்தின் கிராம அலுவலர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் தலைமையில் கடற்றொழிலாளர் ஓய்வு மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கிராம மட்ட அபிவிருத்திக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்தனர்.
இதன்போது கிராமத்திலுள்ள கடற்றொழிலாளர் ஓய்வு மண்டபத்தைப் புனரமைத்து பொதுநோக்கு மண்டபமாக பயன்படுத்தல்,
உதயசூரியன் முன்பள்ளிக்கு முன் மண்டபம் அமைத்தல்,உப்புக்கேணிக் குளத்திற்கு ஒரு பக்க பாதுகாப்பு வேலி அமைத்தல்,உதயசூரியன் மற்றும் மகிழங்கேணி கிராம வீதிகளில் மதவு அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
மேற்படி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்திற்கு 382 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தின் சகல கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளிலும் அபிவிருத்தித் திட்டத்திற்கான முன்மொழிவுகளை பொதுமக்களிடம் பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் திட்டங்கள், குடிநீர் விநியோக கருத்திட்டம், மதஸ்தானங்களில் சூரியப்படலம் அமைத்தல்,கிராமப்புற மருத்துவமனை அபிவிருத்தி, நீர்ப்பாசனக் குளம்,வாய்க்கால் புனரமைப்பு, பாடசாலை வீதிகள்,விவசாய வீதிகள் புனரமைப்பு, காட்டு விலங்குகளிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(சாவகச்சேரி விசேட நிருபர்)