நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவால்களுக்குப் பயந்து ஓடாமல், அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டதால் இரண்டு வருடங்களின் பின்னர், நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சரியான அரசியல் தலைமைத்துவத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாகவும், எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.
ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீட்டில் கடுவெல, மாபிம பிரதேசத்தில் நிறுவப்பட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய எரிவாயு நிரப்பு நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு (08) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த சாகல ரத்நாயக்க கூறியதாவது:
”நிலையான அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் தேவைகளை அதிகரிக்கும் நோக்கில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த எரிவாயு நிரப்பு நிலையத்தை லிட்ரோ நிறுவனம் நிர்மாணித்துள்ளது.இதன் மூலம் எரிவாயு சிலிண்டர் கொள்ளளவை 1,80 000 இனால் அதிகரிக்க நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. தினமும் 60,000 கேஸ் சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
லிட்ரோ நிறுவனத்தினால் இவ்வளவு நவீன தொழில்நுட்பத்துடனான நிலையமொன்றை உருவாக்க முடியும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்க முடியாது. லிட்ரோ நிறுவனத்திற்கு ஒரு மோசமான காலகட்டம் இருந்தது. கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. கேஸ் கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் நின்றனர். அரசாங்கத்திடம் அந்நியச் செலாவணி இருக்கவில்லை. அரசிடம் பணமும் இருக்கவில்லை. இது போன்ற ஒரு கடினமான காலத்தையே நாம் கடந்து வந்திருக்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சரியான தலைமைத்துவத்தால் வெளிநாடுகளின் ஆதரவு கிடைத்தன .
முன்னர் லிட்ரோ நிறுவனம் அரசுக்கு சுமையாக இருந்தது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நிறுவனத்தின் முகாமைத்துவத்தை மாற்றியமைத்ததால், இன்று இந்நிறுவனம் இந்த நிலைக்கு வந்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் வெற்றியினால் உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 26 பில்லியன் ரூபா கடன் தொகையை ஆறு மாதங்களுக்குள் செலுத்த முடிந்தது. கடந்த வருடம் லிட்ரோ நிறுவனம் 03 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. தற்போது மக்கள் வரிசையில் நிற்காமல் எரிவாயுவை பெற்றுக் கொள்கின்றனர். மிகவும் சவாலான காலகட்டத்தின் பின்னர் லிட்ரோ நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் உட்பட பணிப்பாளர் சபை, பணியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.