சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் அதிக கட்டணத்தை அறவீடு செய்த கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் நிர்வாகத்தினருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபராதம் செலுத்தாவிட்டால், ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுமென்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பிரதான நிர்வாகத்தினர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாலேயே, இத்தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் மகனான சனத் குமார அத்துக்கோரல என்பவர், இது குறித்து சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடு செய்திருந்தார். இதையடுத்து, தேசிய ஔடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் உணவு மருந்து பரிசோதகரால் இவ் வைத்தியசாலையின் நிர்வாகத்தினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.குறித்த நோயாளி,
2023 பெப்ரவரி 07 முதல் 19 க்கிடையில் சுகயீனம் காரணமாக கொழும்பு நாரயன்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இவரிடம் வைத்தியசாலை நிர்வாகத்தினர் சாதாரண கட்டணத்துக்கு மாறாக அதிகளவிலான தொகையை பெற்றுள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கட்டண சீட்டு உள்ளிட்ட 06 ஆவணங்கள் சாட்சிக்காக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.