– 2 துப்பாக்கிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளமை அம்பலம்
கடந்த ஜனவரி 22ஆம் திகதி தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் பெலியத்த பகுதியில் ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்கு உதவி, ஒத்தாசை புரிந்த சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரும் நேற்றையதினம் (29) காலை ரத்கம பகுதியில் வைத்து, ஹக்மண பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் பூசா பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்களாவர்.
இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் தனக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை, குறித்த சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து பூசா பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹக்மண பொலிஸ் நிலையத்தால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.