அம்பத்தலை பகுதியில் சடலமாக மீட்பு
களனி கங்கையில் நீரா டச் சென்று முதலைக்குப் பலியான ஒன்பது வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுவனை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடுவெல, வெலிவிட்ட சென். அந்தனீஸ் மாவத்தையை வசிப்பிடமாக கொண்ட திஸ்ன பிரபோத் பெரேரா என்ற சிறுவனே கடந்த 16ஆம் திகதி பிற்பகல் இவ்வாறு முதலைக்கு இரையாகியிருந்தார். அவர் கடுவெல வெலிவிட்ட புனித மரியாள் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்று வந்தவராவார்.
கடந்த 16ஆம் திகதி பிற்பகல் மேற்படி சிறுவன் தனது பாட்டி மற்றும் இளைய சகோதரருடன் வெலிவிட்ட சென். அந்தனீஸ் மாவத்தையிலுள்ள களனி கங்கையில் குளிக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அதன்போது அவரது பாட்டி ஆடைகளை சலவை செய்து கொண்டிருந்த சமயம், அவரும் அவரது இளைய சகோதரரும் குளிப்பதற்காக நீரில் இறங்கியுள்ளனர். அதன்போது திடீரென அங்கு வந்த முதலையொன்று திஸ்ன பிரபோத் என்ற 9 வயது சிறுவனை இழுத்துச் சென்றுள்ளது.
அதன்போது, அங்கிருந்தோர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அந்த முதலை சுமார் 18 அடி நீளம் கொண்டது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்