கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் தப்பிச்சென்ற விவகாரத்தையடுத்து, ஏற்பட்ட பதற்றம் தணிந்து,தற்போது அங்கு வழமை நிலை ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து தப்பிச்சென்ற பதினைந்து கைதிகளைத் தவிர, ஏனைய கைதிகள் மீண்டும் சரணடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி பிற்பகல் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு கைதிகள் குழுவிற்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால்,அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு அதிகளவு கைதிகள் தப்பிச் சென்றனர்.
அத்துடன் அங்கு இடம்பெற்ற மோதலில், காயமடைந்துள்ள கைதிகள் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் காயமடைந்தவர்களில் 5 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அங்கு வரவைழைக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைதிகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், 26 பேர் காயமடைந்து வெலிக்கந்தை மற்றும் பொலனறுவை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவங்களில் 26 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து தப்பியோடியிருந்த 25 கைதிகள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சரணடைந்துள்ளனர். தப்பிச் சென்றுள்ள மேலும் கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் 15 பேர் தவிர்ந்த ஏனையோர் சரணடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)