ஆயுள்தண்டனை அனுபவித்துவந்த மேலும் இரண்டு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு சிறைக்கைதிகளும் வெலிக்கடை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தனர்.இந்நிலையில், அவர்களை விடுதலை செய்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் பொன்னம்பலம் மதன் என்ற கிருபாகரன் 47 வயதுடையவர் மகசின் சிறைச்சாலையில் ஆயுள்தண்டனை அனுபவித்துவந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவராவார்.
ஏனைய சிறைக்கைதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்த வந்தார். அவர் 2015 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹோர்ட்டன் பிரதேசத்தில் பஸ் வண்டியொன்றுக்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் அவர் தொடர்புபட்டதாக குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்டு இவர்,ஆயுள் தண்டனை பெற்றவராவார்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க இவ்விருவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)