முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறும் என்றும் அத்தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வரும் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டு மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவரே எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவாரென்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கிய வர்த்தகர் குழுவொன்றை சந்தித்தபின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, நிமல் லான்சா எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மீது நாட்டு மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
மிக மோசமாக வீழ்ச்சியடைந்த நாட்டை அவரே மீண்டும் கட்டியெழுப்பியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகி றது. வெறுமனே வாய் வீச்சுக்களையும் பொய்களையும் கூறிவருவோர் நாட்டை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு முயற்சிக்கின்றனர். அதனால், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தம்மிக்க பெரேரா என்பவர் சிறந்த தொழிலதிபராக இருந்தாலும் அவர் ஒரு அரசியல்வாதியல்ல. மொட்டுக் கட்சி அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதாகத் தெரிவித்து வந்தாலும் அதுதொடர்பில் எந்த உறுதியான தீர்மானத்தையும் அக் கட்சி இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)