அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் 23 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 5,944 குடும்பங்களைச் சேர்ந்த 19,959 பேர் பாதிக்கப்பட்டதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
கடந்த டிசெம்பர் மாதம் 28ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 3ஆம் திகதிவரை பெய்த அடை மழை மற்றும் பலத்த காற்றால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வெள்ளத்தால் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 2,140 குடும்பங்களைச் சேர்ந்த 8,100 பேரும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 1,287 குடும்பங்களைச் சேர்ந்த 3,992 பேரும், காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 1,203 குடும்பங்களைச் சேர்ந்த 3,992 பேரும், லகுகல பிரதேச செயலாளர் பிரிவில் 888 குடும்பங்களைச் சேர்ந்த 2,324 பேரும் பாதிக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 143 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கு முதற்கட்டமாக 10,000 ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், மழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளின் விபரம் கிடைத்ததும் முழுமையான நட்டஈடு வழங்கப்படுமென்றார்.
வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த 2,990 குடும்பங்கள் தற்போது சீரான காலநிலை நிலவுவதை தொடர்ந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடு பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
ஒலுவில் விசேட நிருபர்