நடிகர் விஜய் நடித்த லியோ படத்தில் அதிக அளவில் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய வழக்கில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த ராஜமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நடிகர் விஜய் நடித்த லியோ படத்தில் அதிக அளவில் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இளம் சிறார்கள் தவறானப் பாதைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். லியோ படத்தை எதிர்காலத்தில் திரையிட தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரப்பில், “இந்த மனு விளம்பர நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். மேலும், மனுதாரர் தரப்பில் படத்தில் எத்தனை வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எந்த இடங்களில் அந்தகாட்சிகள் வருகின்றன என்றும் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.