வங்கியில், நடைமுறைக்கணக்கை ஆரம்பித்தல், கட்டிட நிர்மாணத் திட்டம் தொடர்பான அனுமதியை கோரல், வாகனமொன்றை பதிவு செய்தல், வாகனத்துக்கான வருமான வரி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல் மற்றும் காணி உரிமையை பதிவுசெய்யும் போதும் வரி இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 01ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு
வரப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேபோன்று வரி இலக்கத்தை பெற்றுக் கொண்டோர் அனைவரும் வரியை செலுத்துவதற்கு கடமைப்பட்டவர்களல்ல, என்பதையும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வருடாந்த வருமானத்தினடிப்படையில் 12 இலட்சத்தை விட அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களே இந்த வரி செலுத்துவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளனர்.
எவ்வாறெனினும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தம்மை பதிவு செய்துகொள்வது அவசியம். வருடாந்த வருமானம் 12 இலட்சத்தை விட அதிகரிக்குமானால் ஒரு நபரோ அல்லது நிறுவனமோ வரி செலுத்த கடமைப்பட்டுள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்டோர் தம்மைப் பதிவு செய்து வரி இலக்கத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தவறான பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன.
லோரன்ஸ் செல்வநாயகம்