மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று (01) சுவாமி விவேகானந்திரின் சிலைக்கு அடிக்கல் நடப்படவுள்ளது.இந்நிகழ்வு,மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் நடைபெறுகிறது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்கின் றனர்.ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு நிறைவு விழாத்தொடரை ஆரம்பித்து வைக்குமுகமாக, துறவி சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு அடிக்கல் நடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாருக்கு மட்டக்களப்பு கல்லடியில் சிலை வைக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து கல்பதரு தினத்தின் அடுத்த நிகழ்வாக, கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் ராமகிருஷ்ண மிஷன் உடன் இணைந்து நடத்தும் தையல், மனையியல் மற்றும் கைவினைப் பொருள் பயிற்சி நெறி அங்குரார் பண வைபவம் கிரானில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வு கிரான் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் நடைபெறும். பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் மற்றும் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்த ஜீ மகராஜ் ஆகியோர் கலந்து சிறப்பிப்பர்.
சிறப்பு அதிதியாக உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா கலந்து சிறப்பிக்கிறார்.
( காரைதீவு குறூப் நிருபர் )