– மேலும் ஒருவரிடம் கார் பரிசு என தெரிவிப்பு
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகள் இவருர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள், தம்மை வைத்தியர்கள் என கூறி இரு பெண்களுடன் காதல் உறவில் ஈடுபட்டு பணத்தை மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.
மற்றைய பெண்ணிடம் கார் வென்றுள்ளதாகக் கூறி, அதற்கான பணத்தை காசோலை மூலமாகவும் ஏனைய ஆவணங்களை கூரியர் சேவை மூலமும் அனுப்பியுள்ளதாக தெரிவித்து பண மோசடி செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 19ஆம் திகதி, ரூ. 10 இலட்சத்து 45 ஆயிரம், கடந்த மார்ச் 07ஆம் திகதி ரூ. 1 கோடியே 2 இலட்சத்து 22 ஆயிரத்து 634, கடந்த ஜூலை 06ஆம் திகதி ரூ. 1 கோடியே 85 இலட்சத்து 31 ஆயிரத்து 676 என 3 பெண்களால் செய்த 3 முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றப் விசாரணைப் பிரிவின் சமூக ஊடகப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குகள் தொடர்பில் தகவல்களை பெற்ற பொலிஸார் CCTV உதவியுடன் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் அடையாளம் கண்டு, அளுத்கம பிரதேசத்தில் வைத்து இரு சந்தேகநபர்களையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் 14 ATM அட்டைகள், 5 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவருக்கும் கடவுச்சீட்டு இல்லை எனவும், கடவுச்சீட்டுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.