அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்திக்காக தன்னால் முடிந்த பணிகளை செய்வதற்கு எண்ணியுள்ளதாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி
எஸ்.எம்.எம்.முசாரப் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில்,விளையாட்டு,பாதை அபிவிருத்தி மற்றும் கூட்டுறவுத்துறைகளின் அபிவிருத்திக்காகவும், எழுச்சிக்காகவும் அரசாங்கம் அடுத்த வருடத்தில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது. அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் அவ்வாறான முக்கியத்துவம் மிக்க அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிச்சயம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளேன். அதற்காக நீங்கள் எல்லோரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மக்களின் சார்பில் நின்று அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்ட நாம், இன்று அரசியல்வாதியாக மாறிய நம்மிடம் கேள்வி கேட்ட முடியாத நிலைக்கு சமூகம் சார்ந்த, நமது பிரதேசம் சார்ந்த பல வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளோம்.
மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். அதை எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் செய்தாலும் அதனை விமர்சிக்கவோ, தடுக்கவோ ஒருபோதும் நாம் முனைந்ததில்லை. நுரைச்சோலை வீட்டுத்திட்டம் போல் புரையோடிப் காணப்படும் பல பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதுதான் எமது ஒரே எதிர்பார்ப்பாகும்.
நாட்டை முன்னோகிக் கொண்டு செல்ல பொருத்தமான ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் பார்க்கின்றனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும் செல்வாக்குடன் கூடுதல் வாக்குகளைப் பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இன்று முஸ்லிம் கட்சியின் தலைவர் ஒருவர், அதிகாரத்தைப் பெறுவதற்காக அங்கும் இங்கும் நாடகமாடித் திரிகின்றார். அவரின் பித்தலாட்டத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)