பாகிஸ்தானில் அரச விரோத வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விதமான வன்முறைகள் கடந்த மாதத்தில் மாத்திரம் 34 வீதமாக உயர்ந்துள்ளதாக முரண்பாடுகள் மற்றும் பாதுகாப்பு கற்கைகளுக்கான பாகிஸ்தான் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலிபான்கள் அந்நாட்டு அரசுடன் மேற்கொண்டிருந்த யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து அரச விரோத வன்முறைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன. தெஹ்ரீக் — இ- — தலிபான் பாகிஸ்தான் என்ற ஆயுத குழுவினரின் தீவிரவாத செயற்பாடுகள் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் இடம்பெறக்கூடிய சூழலில் பெஷாவரின் வர்ஷக் வீதியில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் சிறுவர்களாவர் என்று வர்ஷக் பொலிஸ் நிலைய சுப்ரீண்டன்ட் அர்ஷக் கான் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு உடனடியாக எவரும் உரிமை கோராத போதிலும் குண்டு வெடிப்பு தொடர்பிலான விசாரணைகள் விரிவாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். பெஷாவர் பொது பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ள இக்குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானின் ஜனாதிபதி, காபந்து அரசின் பிரதமர், சட்டத்தை அமுல்படுத்தும் துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவை தளமாகக் கொண்டுள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனமொன்று குறிப்பிட்டிருப்பதாவது, பயங்கரவாதிகள் பாடசாலைப் பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்துவதும் பாடசாலைகளுக்கு அருகில் குண்டு வெடிப்புக்களை மேற்கொள்வதும் சிறுவர்களை பாடசாலைக் கல்வியில் இருந்து தூரமாக்கும் உத்தி என்றுள்ளது.