Sunday, April 28, 2024
Home » மகாகவி பாரதிக்கு 141 வயது; பேராசிரியர் கைலாசபதிக்கு 90!

மகாகவி பாரதிக்கு 141 வயது; பேராசிரியர் கைலாசபதிக்கு 90!

by mahesh
December 13, 2023 9:06 am 0 comment

பாரதி இயலில் தினகரனின் வகிபாகம்; கைலாஸ் விட்டுச் சென்ற பணிகளை செவ்வனே முன்னெடுத்துச் சென்றவர் அமரர் சிவகுருநாதன்

ஏரிக்கரை பத்திரிகையான ( Lake House) தினகரன் 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23.-05.-1948 அன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

ஆங்கில, சிங்கள, தமிழ் ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டுவரும் Lake House என்ற பெரிய நிறுவனத்தின் ஒரேயொரு தமிழ்த்தினசரி தினகரன் வெளிவரத்தொடங்கிய காலகட்டத்தில் மற்றுமொரு இந்திய ஊடகம் என்ற மாயைதான் இலங்கை வாசகர்களிடம் உருவாகியிருந்தது.

தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப்பத்திரிகையாக்கிய பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே சாரும். இவருக்கு முன்னர் கே.க.ப. நாதன் தினகரன் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் இவர் கொழும்பில் தினபதி, சிந்தாமணி, வெளியிட்ட சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் தந்தி மாலைத்தினசரியின் ஆசிரியரானார்.

பாரதி ஆய்வாளராகவும் அறியப்பட்ட பேராசிரியர் க. கைலாசபதியின் தினகரன் ஆசிரியப்பணி குறித்து இருவேறு கருத்தியல்கள் இலக்கிய உலகில் நிலவியதை அறிவோம்.  

“பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ்ச்சிறப்பு பட்டதாரியாக அவர் முதல் வகுப்பில் சித்தியெய்திய பின்னர், அன்று உயர்வாக மதிக்கப்பட்ட அரச நிர்வாகப்பதவியொன்றினைத் தேடியிருக்கவோ அல்லது உயர்கல்வி ஆராய்ச்சித்துறையில் இந்நாட்டிலோ வெளிநாடு சென்றோ, உச்சத்துக்கு வந்திருக்கவோ கூடும். ஆனால், கைலாஸ் அவ்வாறு செய்யாது பத்திரிகையுட் புகுந்தார். அதனை வருவாய்க்கு வழியாக அன்றி, அதன் வாய்ப்புகளை உகந்தவாறு பயன்படுத்துவதில் கைலாஸ் குறியாயிருந்தமை தெளிவாகும்.

கைலாஸ் பத்திரிகைத்துறையுட் புகுந்த காலம் மேலைத்தேய நாகரிகமும் ஆங்கில மொழியும் தம் ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கிய காலம்.

பொருளாதார அரசியல் துறைகளில் மட்டுமின்றி பண்பாட்டுத் துறையிலும் அந்நிய ஆதிக்கம் தளரத்தொடங்கிய காலம். சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கப்பட்டதன் விளைவாகத் தமிழ்பேசும் மக்கள், இந்நாட்டில் தங்கள் இருப்பு, வரலாறு, வருங்காலம், தனித்துவம் முதலானவை குறித்து உத்வேகத்துடன் உணர சிந்திக்கத் தலைப்பட்ட காலம்.

தமிழ்மொழி உபயோகச்சட்டம் நிறைவேற்றப்பட்டமை, சுதேச மொழி முக்கியத்துவம் பெறத் தொடங்கியமை, புதிதாக உருவான கலாசார அமைச்சு தமிழ்க்கலை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தமை, அதுவரை ஆங்கிலப் பத்திரிகைகளே பெற்றிருந்த அரசியல் செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் பொதுமக்களைப் பரவலாகச் சென்றடைந்த சிங்கள, தமிழ்ப்பத்திரிகைகளும் பெறத்தக்க வாய்ப்புத் தோன்றியமை, வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாடு காரணமாக இந்திய எழுத்தாளர்களுக்குப் பணம் அனுப்பும் வசதி கட்டுப்படுத்தப்பட்டமை — போன்றவை யாவும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவை” என்று கைலாசபதியின் தினகரன் பிரவேசம் பற்றி பேராசிரியர் சி. தில்லைநாதன் பதிவுசெய்துள்ளார். ( நூல்: பன்முக ஆய்வில் கைலாசபதி)

எழுத்தாளர்களுக்கு சன்மானம் வழங்கத்தக்க மூலதனமும் வருவாயும் நிரம்பப்பெற்றதுதான் லேக்ஹவுஸ் நிறுவனம்.

தினகரனில் அவ்வேளையில் கதைகள் படைத்தவர்கள் சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா பீச்சையும் பகைப்புலமாகக்கொண்டு எழுதினார்கள். இதனால் அன்றைய ஈழத்து தமிழ்த்தேசிய படைப்பிலக்கியம் தேக்கம் கண்டது.

அதனை உடைத்தெறிந்தவர்தான் கைலாசபதி. இவர் ஈழத்து எழுத்தாளர்களுக்கு தினகரனில் களம் தந்து ஊக்கமளித்தார். பத்திரிகையின் செல்நெறியை வகுத்தார். பாரதி தொடர்பாக ஏராளமான ஆய்வுகள் மேற்கொண்டார். இரு மகாகவிகள், பாரதிஇயல் ஆய்வுகள் முதலானவற்றை எழுதியிருந்தார்.

கைலாசபதிக்குப் பின்னர், தினகரன் ஆசிரியராக பொறுப்பேற்ற இ. சிவகுருநாதன், யாழ்.பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப்பட்டம் பெறுவதற்காக சமர்பித்த ஆய்வில், “தேசிய இலக்கியம் உருப்பெற்று வளர்ச்சிகாண கைலாசபதி களம் அமைத்துக்கொடுத்தார்” என்று குறிப்பிட்டிருப்பதையும் பேராசிரியர் தில்லைநாதன் ஊடாக நாம் அறிகின்றோம்.

கைலாசபதி, தான் மாத்திரம் வளராமல், தன்னைச்சூழ இருந்தவர்களையும் வளர்த்தெடுத்தார். அவர்கள் பத்திரிகையாளர்களாயினும் படைப்பாளிகளாயினும் கலைஞர்கள், ஓவியர்கள், கார்டுனிஸ்ட்டுகளாயினும் சிற்றிதழ்காரர்களாயினும் அவர்கள் அனைவரும் தத்தமது துறைகளில் ஆரோக்கியமாக வளர்வதற்கு உற்றதுணையாக விளங்கினார்.

பாரதியாரைச் சுற்றியும் எப்பொழுதும் நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் இருக்குமிடத்தில் வாதங்களும் இடம்பெறும். யார் யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது பற்றிய கலந்துரையாடல்கள் நிகழும். மொழிபெயர்ப்புகள் தொடர்பாக பேசப்படும்.

கைலாசபதியும் பாரதியைப்போன்றே தமக்கு நெருக்கமான இலக்கிய நண்பர்களிடம் கருத்துப்பரிமாறி பணிகளையும் ஒப்படைப்பார்.

யார் யார் தினகரனில் என்ன என்ன எழுதவேண்டும், எத்தனை நாளில் அவற்றை ஆசிரியபீடத்தில் கொடுக்கவேண்டும் என்று அந்த மின்னஞ்சல் யுகமில்லாத காலத்திலேயே பத்திரிகை ஆசிரியர் பாரதியைப்போன்றே இயங்கியவர் அவர்.

கைலாசுக்குப் பின்னர், தினகரன் ஆசிரியப்பொறுப்பை ஏற்ற இ.சிவகுருநாதன் மாத்திரமே இங்கு நீண்ட காலம் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளராவார். இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக 1981 இல் தெரிவான சிவகுருநாதன், அதன் பின்னர் 1983_- 84 காலப்பகுதியிலும் அந்தப் பதவியை வகித்தவர். ஊடகத்துறையிலிருந்தவாறே சட்டமும் பயின்று, கொழும்பு சட்டக்கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகவுமிருந்த சிவகுருநாதன், மற்றுமொரு பத்திரிகையாளர் எஸ்.திருச்செல்வம் தொடங்கிய கொழும்பு கலை இலக்கிய நண்பர்கள் என்ற அமைப்பிலும் காலப்போக்கில் கொழும்பு தமிழ்ச்சங்கத்திலும் தலைவராக இருந்தவர்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் அங்கு வெளியான ‘இளங்கதிர்’ என்னும் இதழின் ஆசிரியராகவும் இயங்கியிருக்கும் இவர், அங்கு இந்து தர்மம் என்னும் மற்றுமொரு இதழ் வெளிவருவதற்கும் முக்கிய பங்காற்றியவர். ஈழத்து இலக்கிய உலகையும் இங்குள்ள படைப்பாளிகளையும் நன்கு தெரிந்துவைத்திருந்த சிவகுருநாதன், தினகரனில் பல சந்தர்ப்பங்களில் பாரதி தொடர்பான ஆசிரியத் தலையங்கங்களும் எழுதியுள்ளார்.

தினகரன் வாரமஞ்சரியும் காலத்துக்குக்காலம் பாரதி ஆய்வுகளை வெளியிட்டும் மறுபிரசுரம் செய்தும் வந்திருக்கிறது. ருஷ்ய எழுத்தாளர் ஏ. ஷெலிஷேவ், கைலாசபதி, செ. கணேசலிங்கன், இளங்கீரன், சி. மௌனகுரு, சொக்கன், க. நவசோதி, மு. கனகராசன், மு. சடாட்சரன், வேல் அமுதன், அராலி வெ.சு. நடராசா, அன்புமணி, க. கந்தசாமி, அந்தனிஜீவா, பொன்னி ஆனந்தன், சகுந்தலா நல்லையா, ஏ. இக்பால், தமிழக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ஆகியோரின் பாரதி பற்றிய ஆக்கங்களும் ஸ்ரீதேவகாந்தன், ஷெய்கு இஸ்ஸதீன், மு. துரைசாமி, பாண்டியூரான், வளவை வளவன், சி. ஆறுமுகம், முதலான பலரின் கவிதைகளும் பாரதி நூற்றாண்டு காலத்தில் தினகரன் வாரமஞ்சரியை அலங்கரித்திருக்கின்றன.

தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் காலம் அறிந்து அதற்குப் பொருத்தமாகவும் பல விடயங்களைச் செய்திருப்பவர். பாரதி நூற்றாண்டு காலத்தில்தான் பேராசிரியர் கைலாசபதி கொழும்பு அரசினர் மருத்துவமனையில் 1982 டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி காலமானார்.

அவர் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மறைவதற்கு முதல்நாள் டிசம்பர் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தினகரன் வாரமஞ்சரியில் கைலாசபதி எழுதியிருந்த ‘பாரதியின் புரட்சி’ என்ற கட்டுரையை சிவகுருநாதன் வெளிவரச் செய்திருந்தார். கைலாசபதி மருத்துவமனைக் கட்டிலிலிருந்து அதனையும் பார்த்துவிட்டுத்தான் நிரந்தரமாக கண்களை மூடினார்.

லெ. முருகபூபதி அவுஸ்திரேலியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT