தினகரன் பத்திரிகையுடன் பல தசாப்த காலமாக ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்ற மூத்த ஊடகவியலாளர்களான எம்.ஏ.எம். நிலாம், கரவெட்டி எஸ். தில்லைநாதன் ஆகிய இருவரும் ‘வாழ்நாள் சாதனையாளர்’ என்ற அதியுயர் விருது வழங்கி
இன்று கௌரவிக்கப்படுகின்றனர்.
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கான அதியுயர் விருது வழங்கும் விழாவிலேயே இவ்விருவரும் இன்று அதியுயர் விருது(வாழ்நாள் சாதனையாளர்) பெறுகின்றனர். ஆரம்ப காலம் தொட்டு தினகரன் வாயிலாக தமிழ்பேசும் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட எம்.ஏ.எம். நிலாம், எஸ். தில்லைநாதன் ஆகிய இவ்விருவரும் தினகரன் குடும்பத்தின் முக்கிய பாத்திரங்களாவர். ஆரம்ப காலத்தில் தினகரன் வழங்கிய ஊடகக் களத்தில் கால்பதித்த இவ்விருவரும், செய்திகள் மற்றும் கட்டுரைகள் ஊடாக தமிழ்பேசும் வாசகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர்களாவர்.
மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் ஆரம்ப காலத்தில் சிறுகதை,கவிதை வாயிலாக தினகரன் ஊடாக இலக்கியக்களத்தினுள் கால்பதித்தவர். அதன் பின்னர் தினகரனில் செய்திகள், கட்டுரைகள் என்றெல்லாம் ஏராளமான ஆக்கங்களை எழுதிக் குவித்தவர். லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளின் ஆலோசகராக பல வருடங்கள் பணிபுரிந்த எம்.ஏ.எம். நிலாம், தினகரன் வாரமஞ்சரிக்கு இன்றும் இலக்கியப் பங்களிப்பு வழங்கி வருகின்றார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகின்ற மற்றைய மூத்த ஊடகவியலாளரான கரவெட்டி எஸ். தில்லைநாதனும் எமது தினகரன் குடும்பத்தின் பிரதான உறுப்பினர்களில் ஒருவராவார்.
யுத்தம் உச்சத்தில் நிலவிய அன்றைய நெருக்கடி காலகட்டத்திலும் கூட, தினகரன் பத்திரிகையின் முக்கியத்துவத்தை வடபகுதி இளைய சமுதாயத்தினர் மத்தியில் எடுத்துச் சென்ற பாராட்டுக்குரியவர் தில்லைநாதன்.
பல தசாப்த காலமாகவே தினகரனின் கரவெட்டி நிருபராகப் பணியாற்றி வரும் ஊடகவியலாளர் தில்லைநாதன், தினகரனுக்கு நாள் தவறாமல் செய்திப் பங்களிப்பு நல்கி வருகின்றார். அதுமாத்திரமன்றி, தினகரனுக்ெகன்று வடபகுதியில் பெரும் வாசகர் குழாமொன்றை உருவாக்கிய பெருமையும் அவரையே சாரும்.
தினகரன் ஆசிரியபீடத்துடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தனது நீண்டகால அனுபவத்தின் பேரில் பயனுள்ள ஆலோசனைகளையும் தில்லைநாதன் வழங்கத் தவறுவதில்லை.
தினகரனின் பிரதான பாத்திரங்களாகக் கருதப்படுகின்ற எம்.ஏ.எம். நிலாம் மற்றும் எஸ். தில்லைநாதன் ஆகிய இருவரும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதை முன்னிட்டு எமது தினகரன் ஆசிரியபீடம் பெருமை கொள்வதுடன், அவ்விருவருக்கும் பாராட்டும் தெரிவிக்கின்றது.