2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதிசேர் வரிக்கு (VAT) விண்ணப்பிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள 138 பொருட்களில் 97 பொருட்களை மீள் மதிப்பீடு செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக, இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை மீதான விவாதத்தில், உள்ளூர் உணவு உற்பத்தியை VAT முறையினுள் இணைப்பதற்கான தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
“உத்தேச வற்வரி விலக்குகளை நீக்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் யோசனைகளை கவனத்திற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது.
VAT இலிருந்து விலக்களிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை திருத்துவதன் மூலம் அரசாங்கம் 378 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளது.
2024ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP ) 9.2 சதவீதமாக இருக்கும் தனது வருவாயை 12 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகவும், இந்த இலக்கை அடைய வருமானவரிக் கட்டமைப்பில் திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக குறுகியகால தடை தீர்வுகளை நம்பியிருந்த நாடு, அதன் பொருளாதார பிரச்சினைகளுக்கு நீண்டகால, நிலையான தீர்வை தொடர்வதற்கான சரியான தருணத்தை எட்டியுள்ளது.
2023ஆம் ஆண்டில் 187 பில்லியன் ரூபா நலன்புரிச் செலவு, 2024ஆம் ஆண்டில் 207 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க வருமானத்தில் 70 சதவீதம் கடன் வட்டியாக செலுத்தப்படவுள்ளது.
அரசாங்கம் 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் VAT விகிதத்தை 18 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. மேலும் கல்வி, சுகாதாரம் மற்றும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தவிர, VAT விலக்குகளை நீக்கவும் முன்மொழிந்துள்ளது” என்றார்.