Saturday, April 27, 2024
Home » கைது செய்யப்பட்டு உடை களையப்பட்ட பலஸ்தீனர்கள்

கைது செய்யப்பட்டு உடை களையப்பட்ட பலஸ்தீனர்கள்

by gayan
December 9, 2023 10:14 am 0 comment

வடக்கு காசாவில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் தங்கி இருந்த பாடசாலை ஒன்றுக்கு அருகில் கைது செய்யப்பட்ட பலஸ்தீன ஆடவர்கள் பலரையும் இஸ்ரேலிய படை அவர்களின் உடைகளை அகற்றி உள்ளது.

தமது கைதுக்காக எதிர்ப்பை வெளியிடாத நிலையில் இந்த ஆடவர்களை பாடசாலைக்கு அருகில் நிறுத்திய இஸ்ரேலிய படை அவர்களின் உடைகளை களைந்து உள்ளாடையுடன் மாத்திரம் கண்கள் கட்டப்பட்ட நிலையில் விசையில் அழைத்துச் சென்றுள்ளது. பெயித் லஹியாவில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலைக்கு அருகிலேயே இது நிகழ்ந்துள்ளது.

இதில் அல் அரபியா செய்தி நிறுவனத்தின் காசா செய்தியாளர் தியா கோஹ்லொட் மற்றும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டவர்களில் இருப்பதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மூத்த குடிகளும் இருப்பதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இராணுவ வாகனத்தில் ஏற்றப்படுவதும் வெளியான புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.

பல நாட்கள் முற்றுகைக்குப் பின்னர் பெயித் லஹியாவில் உள்ள கலீபா பின் செயித் அல் நஹ்யா மற்றும் அலப்போ பாடசாலைகளுக்கு இஸ்ரேலிய துருப்புகள் கடந்த வியாழக்கிழமை (07) நுழைந்தன. இதனை அடுத்து அங்குள்ள ஆண்கள் கைது செய்யப்பட்டதாக ஜெனீவாவை மையமாகக் கொண்ட யூரோ–மெடிடேரியன் என்ற கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதன்போது வீடு வீடாக சோதனை நடத்தி இருக்கும் இஸ்ரேலிய துருப்புகள் அங்கு தங்கி இருப்பவர்களின் ஆண்களை கைது செய்திருப்பதோடு சில வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் அந்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT