மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான மார்லன் சாமுவேல்ஸுக்கு அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாட 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக சாமுவேல்ஸுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 2021இல் சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக நியமிக்கப்பட்ட தனிநபர் தீர்ப்பாயம் மார்லன் சாமுவேல்ஸ் குற்றவாளி என ஓகஸ்டில் அறிவித்தது.
இதில் பங்கேற்பாளருக்கு அல்லது கிரிக்கெட் விளையாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் பணம், பரிசுப் பொருள் அல்லது சலுகைகளை பெற்றது குறித்து ஊழல் எதிர்ப்பு அதிகாரியிடம் தெரிவிக்கத் தவறியது மற்றும் அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புக் கொண்ட விருந்தோம்பலின் அதிகாரபூர்வ ரசீதை, ஊழல் எதிர்ப்பு அதிகாரியிடம் வெளிப்படுத்தத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
தவிர நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரியின் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறியது மற்றும் விசாரணைக்கு தொடர்புடையதாக இருக்கக்கூடிய தகவல்களை மறைப்பதன் மூலம் நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரியின் விசாரணையைத் தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது ஆகிய குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2019இல் அபூதாபி டி20 லீக் போட்டியில் கர்நாடகா டஸ்கர்ஸ் அணிக்காக மார்லன் ஒப்பந்தமானார். அவர் அப்போட்டியில் பங்கேற்கவில்லை எனினும் மேற்கண்ட குற்றங்களை அவர் செய்ததாக ஐ.சி.சி நியமித்த தனிநபர் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
2012 மற்றும் 2016 டி20 உலகக் கிண்ணங்களில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த சாமுவேல்ஸ், கடைசியாக 2018இல் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்றார். பின்னர், 2020 நவம்பரில் தனது ஓய்வை அறிவித்தார்.
சாமுவேல்ஸ் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை அல்ல.
2008 மே மாதம் கிரிக்கெட்டுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் பரிசுப் பொருளைப் பெற்றதாக அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.